சபரிமலையில் பெண்கள் வழிபாடு -உச்ச நீதிமன்ற தீர்ப்பு? கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் தடையின்றிச் சென்று வழிபாடு நடத்தலாம் என்ற 2018ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள், தற்போது உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இறுதி விசாரணைக்கு வந்துள்ளன. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த ஆன்மீக மற்றும் சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் வாதங்கள் தொடங்கப்படும் என நீதிமன்றம் கால அட்டவணையை வெளி யிட்டுள்ளது. மத ரீதியான மரபுகளுக்கும். பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன உரிமைகளுக்கும் இடையிலான இந்த மெல்லிய கோட்டை நீதித்துறை எவ்வாறு கையாளப்போகிறது என்பதே தற்போது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 22ஆம் தேதியுடன் இந்த இறுதி விசாரணை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளையும், பெண்களின் சம உரிமைப் போராட்டத்தையும் சமன் செய்யும் ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது.