தீபாவளி சீட்டு நடத்தி ரூ.55 லட்சம் மோசடி: தம்பதி கைது சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (36) மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி (32) ஆகிய இருவரும். கடந்த 2021ம் ஆண்டு முதல் தங்கள் பகுதியில் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். மாதந்தோறும் ரூ.1,000 வசூலித்து, பண்டிகை காலத்தில் தங்க நகை, பட்டுப்புடவை மற்றும் பட்டாசுகள் தருவதாகக் கூறி 250க்கும் மேற்பட்டோரை இதில் சேர்த்துள்ளனர். இவர்களது ஆசை வார்த்தைகளை நம்பி பொதுமக்கள் கட்டிய சுமார் ரூ.55 லட்சம் பணத்தை, தம்பதியினர் தங்களது சொந்தக் கடனை அடைப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட சங்கீதவாணி என்பவர் அளித்த புகாரின் பேரில், பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தம்பதியினரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.