
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை வருகை: ரூ.162 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்
தமிழக முதலமைச்சர் வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
காரைக்குடி : ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு சட்டக் கல்லூரி, டைடல் பார்க் மற்றும் வீறு கவியரசர் முடியரசனார் திருவுருவச்சிலை ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
கானாடுகாத்தான் : ரூ.61.78 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். திருப்பத்தூர் : சிராவயல் கிராமத்தில் காந்தியடிகள் ஜீவா சந்திப்பின் நினைவாக ரூ.3.27 கோடியில் கட்டப்பட்ட நினைவு அரங்கம் திறக்கப்பட உள்ளது. குன்றக்குடி : தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு அரசு விழா முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது.
கிராஃபைட் சுரங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் : சிவகங்கை அருகே இலுப்பக்குடி, அரசனுர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனம் கிராஃபைட் தாது எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 633 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி பி.ஆர். பாண்டியன் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் ஆய்வு: அவ்வாறாக நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகை தொடர்பான பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொண்டு, சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் திரு.குணசேகரன் அவர்கள், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், காரைக்குடி வட்டாட்சியர் ராஜா உட்பட அரசின் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.